அஞ்சாவுப்பு புள்ளையோட அறிவாளியா நீங்க?

நீங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.

மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.

1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.

உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...

1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?

2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?

3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்

கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.

( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)

இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.

விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்

லாபம் நமக்கு மட்டுமே...

இலங்கையில் 11 வருசத்திற்க்கு பிறகு கிரிகெட்டு விளையாடி இலங்கை அணிக்கு நெத்தியில் திரு நாமத்தை போட்டுட்டு வந்திருக்காங்க நம்ம பசங்க.


அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.


சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.


லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...

பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.