சங்க சந்தை...

சங்க சந்தை
மீண்டும் ஒரு முறை கேளுங்கள்

தலைப்பை கவிதையாக்க அல்ல, சரியாக புரிந்து கொள்ள!
ஆம், சங்க சண்டை அல்ல தலைப்பு, சங்க சந்தை!

சங்க நிகழ்வுகளால் ஏறுமுகமாகவும் இறங்கு முகமாகவும் இருக்க
பங்கு சந்தையல்ல நம் உறவு!

மன மகிழ்வுகளால் இன்முகமாகவும் பன்முகமாகவும் இருக்க
நன்கு அறிய வேண்டியது நம் உறவு!

காளையோ கரடியோ அல்ல - நாம்
உணர்வால் விழுந்து எழ அல்லது புரண்டு அழ!

நாம் உணர்வால் தமிழ்ப் பால் குடித்த சிங்கம்

உரிமையோடு சொல்வோம் நாம் ஒவ்வொருவரும்
தமிழ்ச் சங்கத்தின் அங்கம்!

மதுரையானந்தா...





அன்பர்கள் தினப் பெயர்ச்சியா?

ஆத்தா... தாயே பராசக்தி, உன் கோவிலில் சனிப் பெயர்ச்சி பூசை பார்த்திருக்கிறேன், குருப்பெயச்சி பூசை கூட பார்த்திருக்கேன். இது என்ன அன்பர்தினப் பெயர்ச்சியா? இந்த பூசை விளம்பரத்தை பார்த்தவுடன் எனக்கு பேர் அதிர்ச்சி!

ஆத்தா... கலியுகம் ஆத்தா கலியுகம். இன்னும் உன்னை வைத்து என்ன என்ன பூசையெல்லாம் பண்ண போகிறார்களோ தெரியலயே? அவ்வ்வ்வ்.


பின் குறிப்பு: இது எவர் மனதையும் வருந்த வைக்க அல்ல... இக்கோவிலுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடந்து சென்றவன், கோவில் வலைப்பக்கத்தில் இதைக் கண்டேன்... என் மன வருத்தத்தை பதிவு செய்யவே.

முல்லை பெரியாறு – த மஸ்ட்

வலை முழுவதும் முல்லை பெரியாறு பற்றிய பல ஆவணங்கள், யூ-டியூப் காணொளிகள் என்று ஆயிரக் கணக்கில் உள்ளன. எனவே நான் அவற்றை இங்கு குறிப்பிட விரும்ப வில்லை.

முல்லை பெரியாறு – த மஸ்ட், சிவாஜி – த பாஸ்-லேருந்து என் எண்ணமாக நான் சொல்ல நினைப்பது.

எப்படி சிவாஜி (பழைய படம் இல்லை, சங்கர் இயக்கத்தில் வந்த்து) படத்தில் சிவாஜி என்ற ஒரு தனி மனிதன் ஒரு நல்ல நோக்கத்தோடு கல்வி மற்றும் மருத்துவ கூடங்களை நிறுவ பல வகையான எதிர்ப்புகளை எதிர் கொள்ளுவார். சுய நலம் கொண்ட தனி மனித எதிர்ப்பு, அனுமதி பெறவேண்டி அரசு அலுவர்களின் லஞ்ச லாவன்ய கெடுபிடி, லோக்கல் ரவுடியில் ஆரம்பித்து கடைசியில் ஒரு மாநிலத்தின் கல்வி மற்றும் முதல் அமைச்சர் வரை.

முல்லை பெரியாறு விவகாரத்திலும் அதுதான் நடைபெறுகிறது. பென்னிகுயிக் என்ற ஒரு நல்ல மனிதன் இரண்டு மாநிலங்களுக்கும் உதவட்டுமே என்ற உயர்ந்த நோக்கத்தோடு ஒரு சிறந்த அணையை நமக்கு அளித்துவிட்டு சென்றிருக்கிறார். பின்னாட்களில் நடக்கப் போவதை முன்கூட்டியே அனுமானிக்க கூடியவர்கள் அறிவாளிகள் – தீர்க்கதரிசிகள். அப்படிப்பட்ட அறிவாளிகள் எதிகாலத்தில் சுய நலக் காரர்களிடம் இருந்தும், அரசியல் வியாதிகளிடம் இருந்தும் மனித வாழ்வாதாரமான தண்ணீரை காக்க அதை 999 வருட ஒப்பந்தமாக நிலை நிறுத்திவிட்டு சென்றிருக்கிறார்கள்.
மாநிலத்திலும் மத்தியிலும் அரசியல் மாற்றங்கள் நிகழும் போதும், அங்கு அவர்களின் ஆட்சிக்கு அச்சுருத்தல்கள் வரும்போதும் அவர்கள் பிரச்சனைகளை திசை திருப்பவே முல்லைப்பெரியாறு அணையை கையில் எடுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. [சிவாஜி படத்தில் சொல்வது போல், நீங்க கொடுத்ததெல்லாம் அந்த பார்ட்டிக்கு, எனக்கு என்ன கொடுப்பீங்க, உங்க புராஜெக்ட் வேல்யு எவ்வளவு?]

தன் சுய லாபத்திற்க்காக அணைப் பிரச்சனையை கிளறி விடும் அயோக்கியர்களே, உங்கள் ஒவ்வொருவரு ஆட்சி மாற்றதிற்க்கும் உறுதியாக இருக்கின்ற அணையை ஓட்டை போட்டு ஓட்டை போட்டு அணையின் உறுதியை உருகுலைக்கும் அரசியல் வாதிகளே, நீங்கள் போட்ட ஓட்டையால் அணையில் நீர்க்கசிவு உண்டாகிறதோ இல்லையோ, ஒற்றுமையாய் வாழும் தமிழக-கேரள மக்களின் இருதயத்தில இரத்தக் கசிவை உண்ட்டாக்கி விட்டீர்கள். போதும் உங்கள் சோதனை, இம்முறை செய்யும் சோதனை இறுதியாக இருக்கட்டும், முடிவு உறுதியாக இருக்கட்டும்.

மனம் இருந்தால் மார்க்கமுண்டு. உங்கள் அருகில் உள்ள சிறிய நாட்டைப் பாருங்கள், கற்றுக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் – இயற்க்கை வளம் இல்லாத நாடு/ஊர். மலேசியாவிடம் இருந்துதான் குடிநீர் பெறுகிறது. இங்கு உள்ள பிரச்சனைகள் போலத்தான் அங்கும் நிகழ்ந்தது. உதாரணத்திற்க்கு ஒன்று – மலேசியாவிடம் இருந்து பெற்ற நீரை சிங்கப்பூரில் சுத்தப்படுத்தி, பாட்டிலில் அடைத்து அதை மலேசிய சந்தையில் விற்பாதாக. [தமிழகம் கேரள தண்ணீரில் விவசாயம் செய்து அதை கேரளத்தில் விற்பது போல்].

சிங்கப்பூரின் மதியுக அமைச்சர் லீ-குவான்-யூ மற்றும் முதல் அமைச்சர் கோ-சோ-தோங் அணி 2010-ல் முடிவுக்கு வர இருந்த தண்ணீர் ஒப்பந்தத்தை மிக அழகாக கையாண்டார்கள். அப்போது மலேசியா இதில் மலேசிய மக்களின் சிங்கப்பூர் மத்திய சேமிப்பு நிதி இருப்பை (சி.பி.எஃப்) துருப்புச்சீட்டாக உபயோகப்படுத்தியது. எதை எவ்வளவு விட்டுக் கொடுக்க வேண்டுமோ அதை விட்டுகொடுத்து, இரண்டு நாட்டிற்க்கும் எது நல்லதோ அதை முன்னிறுத்தி சிங்கப்பூருக்கு 2011 முதல் 2061 வரை, தற்போதைய விலையை விட 46 பைசா (செண்ட்) அதிகம் கொடுத்து தண்ணீர் வரத்தை உறுதி படுத்தினர். இது தொலை நோக்கு பார்வை மற்றும் பயணத்திற்க்காண தீர்வு, இனி 50 ஆண்டுகளுக்கு அவர்கள் அதைப்பற்றி பேசப்போவது இல்லை.
ஒரே நாட்டில், அருகருகில் உள்ள இரண்டு மாநிலங்களுக்குள் உள்ள தண்ணீர் தேவையை/பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியாதா?
இரு மாநில மக்களும் சொல்லவேண்டிய ஒரே வாக்கியம், அது சிங்கப்பாதை வாக்கியம் : முல்லை பெரியாறு – த மஸ்ட்

Most Unenviable Source to Tamilnadu
Mallus Use and Secure Tenancy

கடலையா இல்லை பீட்டரா?

பள்ளி/கல்லூரி காளைகள் பேசுவது கடலையாகவும், கன்னிகள் பேசுவது பீட்டராகவும் நாம் கூறுவோம். ஆங்கிலத்தில் இதை பொதுவாக “வோக்கல் ஃபிரை” என்று அழைக்கிறார்கள்.


இந்த “வோக்கல் ஃபிரை” அதிகம் காணப்படுவது பெண்கள் இடத்தில் என்று ”ஜர்னல் ஆஃப் வாய்ஸ்”-ன் சமீபத்திய கணக்கெடுப்பு சொல்லுகிறது. இது ஒரு பக்கம் பேச்சின் புதிய வடிவம்/அமைப்பு (ஃபேஷன்/ஸ்டைல்)-ன்னு சொன்னாலும் இது ஒரு வைகையான பாதிப்பு (ஸ்பீச் டிஸாடர்)-ன்னு மருத்துவகள் சொல்லுகிறார்கள். நான் இது பற்றி “இன்னா பேசுர நீ”-ன்னு ஒரு பதிவிட்டிருந்தேன்.


நாம் பேசும் போது ஒன்னு பம்மி பேசுவோம், இல்லையா உரக்க பேசுவோம் இல்லை வறுப்போம், அதைதான் இப்ப “வோக்கல் ஃபிரை”-ன்னு சொல்லுராங்க. எனக்கு ரொம்ப நாளா சில/பல தமிழ்ப் பெயர்களும் ஆங்கில பெயர்களும் ஒத்து இருப்பதை பார்த்து ஆச்சிரியமாக இருக்கும். உதாரணத்திற்க்கு வானவில் (ரெயின்போ) – தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பெயர் வைத்தவர்களுக்கு வில்லின் அமைபை பொதுப்படையாக கையாண்டிருப்பது. இதிலும் வறுத்தலை (ஃபிரை) பொதுப்படையாக இருப்பது.

சரி, வறுத்தலுக்கு அடிப்படை பிரிட்னியோட ஓ பேபி பேபி பாடல், மற்றும் பாப் பாடகிகளோட ஹஸ்கி, முஸ்கி, புஸ்கி பாடகல்தான் காரணமாம்.
ஓ பேபி பேபி கேட்கனும்னா படத்தை கிளிக்குங்க.



உப்புமாக் கவி!

கவிதை எழுதும் நண்பா
தெரியுமா உனக்கு வெண்பா?

கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!

இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா

அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா

கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்

கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்

கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்

ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!

அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!

தமிழ் இனி மெல்ல வாழும்...

தமிழ்
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்

இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்

மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்

வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்

தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.

குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.