Showing posts with label கேட்ஸ். Show all posts
Showing posts with label கேட்ஸ். Show all posts

உப்புமாக் கவி!

கவிதை எழுதும் நண்பா
தெரியுமா உனக்கு வெண்பா?

கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!

இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா

அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா

கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்

கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்

கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்

ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!

அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!

தமிழ் இனி மெல்ல வாழும்...

தமிழ்
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்

இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்

மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்

வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்

தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.

குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.