கொசுத் தொல்லை...

அமெரிக்கா வந்த ஐந்து ஆண்டுகளில் நான் (ஏன் இந்த கொசுக் கடிய ஒவ்வொரு தேசியும் அனுபவிச்சி இருப்பாங்க) அதிகம் கடி பட்டது இரண்டு கொசுக்களிடம். ஒன்று தேசிக் கொசு, மற்றொன்று விதேசிக் கொசு. இந்த ரெண்டு கொசுக்களை அடையாளம் காணுதல், அவற்றை கையாளுதல் மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். நகச்சுவைக்காக மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல.

தேசிக் கொசு:

இந்தக் கொசு தேசியை மட்டும்தான் கடிக்கும். இது மளிகை கடை, காய்கறி கடை மற்றும் வால்மார்ட் போன்ற தேசிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தென்படும். இது உங்களை பார்த்தவுடன் சிரிக்கும், நீங்கள் பதிலுக்கு சிரித்தவுடன் (சிரிக்கா விட்டாலும்) உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று குசலம் விசாரிக்கும். பிறகு பழகுவதற்க்கும், தொடர் நட்பிற்க்கும் என்று சொல்லி உங்கள் தொலைபேசி எண்ணை கேட்கும். தொலைபேசியில் அவ்வப்போது தொடர்பு கொண்டு மீண்டும் சந்திக்கலாம் என்றும், வீட்டிலிருந்தபடியே பணம் பண்ணலாம் என்றும் கடிக்கும். இந்த சிறுகடி ஒரு நாள் பெருங்கடியாக மாறும். இது ரொம்ப சமர்த்தான கொசு கடைசி வரை ஏன் கடிக்கிறேன் எதுக்கு கடிக்கிறேன் என்று சொல்லாது... ஆனா கடிக்கும். இந்த கொசு உங்களை ஒரு வியாபார குழு சந்திப்பிற்க்கு அழைக்கும், உங்களுக்காக அது ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பதாக சொல்ல... சிறுது நேரத்தில் ஒரு கொசுக் கூட்டம்... உங்கள் காதில் (கிழிய) ரத்தம் வர வர கடிக்கும். நீங்கள் கொஞ்சம் ஏமார்ந்தால் அன்றே அது உங்கள் மணி பர்சையும் கடிக்கும்.

இந்த கொசுக்களை நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். மேற்ச்சொன்ன இடங்களில் இந்தக் கொசு வெறும் வண்டியுடன் (எம்டி கார்ட்) சுற்றும்.
இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? அது மிகச் சுலபம். உங்கள் தொலைக்காட்சி பெட்டியில் வரும் மன மகிழ்வு தொலைபேசி எண்களை (உதாரணத்திற்கு, கொஸ்ட் எண்) நினைவு படுத்தி அதை அந்தக் கொசுவிடம் கொடுத்து விடுங்கள். பிறகு என்ன? உங்களுக்கு ஜாலி... கொசுவுக்கு டென்சன்.

விதேசிக் கொசு:

இந்தக் கொசு பெரும்பாலும் தொடர் குடியிருப்பில் உள்ள அனைவரையும் கடிக்கும். இது சனிக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் உங்கள் கதவை தட்டும். உங்கள் நாடு மற்றும் அமெரிக்கா பற்றிய சில நல்ல விசயங்களை கடித்துவிட்டு மெல்ல உங்களை சமயம் பற்றி கடிக்க ஆரம்பிக்கும். இந்த கொசு பரிசுத்த வேதகாமம், பழைய/புதிய ஏற்பாடுகளில் இருந்து சில நீதி/வசனம் என்று சொல்லியும், உங்களை வருகின்ற ஞாயிற்றுக் கிழமை கூட்டு பிரார்த்தனைக்கு வாங்க என அழைத்துக் கடிக்கும்.

இந்தக் கொசுவையும் நீங்கள் எளிதில் அடையாளம் காணலாம். இந்தக் கொசு வீட்டிற்க்கே வந்து கதவை தட்டி கடிப்பதால், கையில் உள்ள விசயங்களை வைத்து முடிவு செய்து விடலாம்.

இந்தக் கொசுக்களை சமாளிப்பது எப்படி? இந்த விதேசிக் கொசு தேசிக் கொசுக்களைக் காட்டிலும் பல மடங்கு நல்ல கொசுக்கள். இதன் நோக்கம் நல்ல(?!) நோக்கம் என்பதாலும், கடிக்கும் போது நல்ல விசயங்களை சொல்லி கடிப்பதாலும் இந்தக் கடியை பொருத்துக் கொள்ளலாம். மேலும் இதை உங்கள் மன நிலைக்கும், பக்குவத்திற்க்கும் ஏற்ப்ப இதைக் கையாளலாம். உதாரணத்திற்கு, கார்ட் ப்ளஸ் அமெரிக்கா, பிறகு சந்திப்போம் என்று சொல்லி அனுப்பி விடலாம். இல்லை எனில் இந்தக் கொசு பரிசுத்த வேதகாமம் என்று ஆரம்பிக்கும் போது நீங்களும், பகவத்கீதை, சுலோஹம் 67, ஸ்ரீ பகவானுவுவாச்ச-ன்னு உங்க பராக்கிரமத்த (கடிதான்) காட்டலாம்.

அன்புடன் அழைக்கிறேன்...

நீங்கள் அட்லாண்டா (அமெரிக்கா – ஜார்ஜியா மாகாணம்) வாழ் தமிழராகவோ அல்லது அட்லாண்டா அருகில் வாழும் தமிழார்வம் கொண்டவராகவோ இருப்பின் உங்களை கேட்ஸ் – கலிஃபோர்னியா தமிழ்க் கழகத் தமிழ்ப் பள்ளிகளின் முதலாம் ஆண்டு விழாவிற்க்கு, விழாக் குழுவினரின் சார்பில் உங்களை வருக வருக என வரவேற்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நாள் : மே 16, 2010 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2 மணி முதல்
இடம் : இண்டிபெண்டன்ஸ் உயர் நிலைப் பள்ளி,
மில்டன் மையம், 86 – ஸ்கூல் டிரைவ், அல்ஃபரட்டா, ஜார்ஜியா – 30009.

நிகழ்ச்சிக் குறிப்பு : 141 குழந்தைகளுக்கு கல்வியாண்டு சான்றிதழ் வழங்குதல், அவர்களின் கலை நிகழ்ச்சிகள் – ஆடல், பாடல், நாடகம், வில்லுப் பாட்டு, காவடியாட்டம் போன்ற தமிழ்க் கலாச்சார மற்றும் பண்பாட்டு கலைகளுடன்.

150-க்கு மேற்ப்பட்ட தமிழ்க் குடும்பங்கள் மற்றும் தமிழ் ஆர்வளர்களின் சந்திப்புக்கள்.

உங்கள் பகுதியில் புதிய கல்விக்கூடம் அமைப்பதற்க்காண வழிகாட்டுதல்கள்.

இளவேனில் கால மஞ்சள் நீராட்டு

இளவேனில்...

ஊரெல்லாம் மஞ்சள்
மகரந்தத்தின் கொஞ்சல்
இது
இளவேனில்கால கெஞ்சல்
வரும் கோடைக்கான அஞ்சல்

மஞ்சள் நீராட்டு...

கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை

அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?

ஓவ்வாமை...

காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.

இவர்கள் சந்தித்தால்....

மரப் புலியும்... அதாங்க டைகர் உட்ஸ்-ம், நம்ம காவிப் பு(போ)லியும் சந்தித்தால் என்ன பேசிப்பாங்க?
மரப் புலி: நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, என்னை வீணா வாம்புல மாட்டி விட்டுட்டாங்கையா... என் பெண்டாட்டி ஒரு பக்கம், பத்திரிக்கை காரர்கள் ஒரு பக்கம்ன்னு பின்னி எடுத்துட்டாங்கப்பா.

நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?

புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
நித்தி: (மனசுக்குள்... அட பாவிங்களா, இவன் நம்மூரு டி.வி.யும் பேப்பரும் படிக்க மாட்டான்னு நினைச்சி கொஞ்சம் பில்டப் பண்ணுலாம்ன்னு பார்த்தா இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களா?) புலி அதெல்லாம் கிராபிஃக்ஸ், நம்பாதீங்க.

புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு...
சாமி: புலி, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டீங்க?

புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி

சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.

புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.

சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.

பழமையின் குதபகாலம் – பின்னூட்ட பதிவு

சாமியார்களும் சந்திப்புகளும்

சாமியார்கள் அன்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர், சந்திப்புகள் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கின்றது. ஆனால் இன்று அந்த சந்திப்புகள் சந்தி சிரிக்கின்றன... காரணம் சாமிகள் இல்லை இன்றைய ஆசாமிகள்.

அன்று அருள் வேண்டி சென்றனர், இன்று பொருள் வேண்டி செல்கின்றனர். சாமியோ, சாமியாரோ... அவர்கள் என்ன கருவூலத்தின் காரியதரிசிகளா... நீங்கள் வேண்டியவுடன் காசு (பொருள்) கொடுக்க?

அன்று அமைதி வேண்டி நடந்த சந்திப்புகள்... சாமிகளை பார்க்க சென்றேன் ஒரு விடிவுகாலம் பிறந்தது என்று சொல்லுவார்கள். அது சாமியார் செய்த மாயமோ மந்திரமோ இல்லை, அங்கு நடந்த சந்திப்பினால் பெற்றது. உதாரணத்திற்க்கு எல்லா காரணிகளும் சரிவர இருந்தும் ஒரு சரியான மேளாலர் இல்லாததால் மனம் நொந்த ஒரு நிறுவனத்தின் முதளாலி, தன் நேர்மையான செயல்பாட்டால் வேலையிழந்த ஒரு தொழிலாளி, சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருக்கும் வேளையில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்கின்றனர், இருவரின் தேவைகளும், மன எண்ணமும்/ஓட்டமும் ஒரே அலைவரிசையில் இருக்க இவர் அவருக்கு, அவர் இவருக்கு என்று உதவ இருவரது வாழ்விலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட அது சாமிகளின் சந்திப்பால் உண்டானது என்று தோன்றி, மீண்டும் அங்கு செல்ல அடுத்த சந்திப்பில் அங்கு வேறு சிலரை சந்திகின்றனர், அவர்களுடைய தேவை ஒரு மருத்துவ உதவியாக இருக்க, அதற்க்கு இவர்கள் உதவ, இவர்கள் செயத அந்த “அறம்” தொண்டு மரமாக (விரிட்சம்) வளர்ந்தது. சாமியார் கற்றதும் பெற்றது ஏதும் இல்லை, மாறாக சாமியாரை காணவந்தவர் கற்றது பெற்றதும் அவரவர் கண்ணும் காதும் திறந்திருந்தற்க்கு ஏற்ப்ப. சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருந்த காலமும், அங்கு வந்திருந்தவர்களின் பிரச்சனைகளை பார்த்த/கேட்ட பிறகு தன் பிரச்சனை ஒரு விசயமே இல்லை எனவும், அதை தானே எவ்வாறு சரிசெய்து கொள்ளலாம் என நினைக்கத்தோன்றும் “சுய தேடல்” அடையும் மனத் தெளிவுமே நீங்கள் அங்கு பெற்ற ”அரு-மருந்து”.

இன்று, காத்திருப்பது காணாமல் போய் எல்லாவற்றிர்க்கும் ஒரு பரபரப்புடன் இருப்பதால் சாமியாரை பார்க்க ஒரு ”கால கட்டம்” அதற்கு கப்பம் ”கட்டாய கட்டணம்”, சாமியார் மருந்தாய் அருளுவது ஒரு ”காய கல்பம்”... என அல்பம் சொல்பம்-ஆகி விட்டது.

சாமியை தேடுவதற்க்குமுன் உங்கள் மனச் சாவியை தேடுங்கள், திறந்த மனதோடு உங்கள் குடும்பத்தினருடன் பேசுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கான காரணங்கள் தோரணங்களாக மாறும்.

பொன்னேரு...

ஏய் சின்னவனே, சாமி அலமாரியிலிருந்து பஞ்சாங்கத்த எடுத்துகிட்டு வாடா.

எந்த பஞ்சாங்கம் தாத்தா?

அந்த பாம்பு படம் போட்டிருக்குமே, கௌரி பஞ்சாங்கம்டா.

தாத்தா ஏதும் விசேஷம் வருதா நம்ம வீட்டுல?

ஆடி பொறந்துடுச்சில்ல, விதைவிட வேண்டாமா? பொன்னேரு கட்டுறதுக்கு நல்ல நாள் பாக்கனும்ல்ல அதுக்குடா.

தாத்தா... இன்னிக்கேவா பொன்னேரு கட்ட போரோம்?

இல்லடா... இன்னும் ரெண்டு நாள் கழிச்சி... புதன் கிழமை காலைல கட்டுவோம், நீ இப்ப பஞ்சாங்கத்த கொண்டுவந்து கொடுத்துட்டு... கொள்ளைல செல்லதுரை இருப்பான்... அவனை போயி மணவெளி பங்குல... சனி மூலைல காட்ட கழிக்க சொல்லு, வயல் பக்கம் கொத்தி போட்டுட்டு... அப்படியே வரப்ப செத்தி வெக்க சொல்லு... சாமிக்கு படையல் வைக்கினும்ல்ல அதுக்கு.

சரி தாத்தா.

[பொன்னேரு (பொன் + ஏர்)... வருடத்தில் ஒரு நாள் பொன்னேரு பூட்டும் நாள்... ஒரு சிறப்பு தினமாக இருக்கும்]

அன்று அவன் அம்மா அரிசியில் வெள்ளம், தேங்காய், எள்ளு எல்லாம் போட்டு அந்த பூட்டரிசி-யை தயார் செய்வாள், அது கூட அவல், வெள்ளம், பொட்டுக்கடலை கலவையும் இருக்கும். பிரப்பங் கூடையில் பூ, பழம், பூட்டரிசி போன்ற பூசை சாமான்களுடன் புதுப் பெண் போல் விதை நெல்லும் அதில் இருக்கும். தீபாவளிபோல் அதிகாலையில் குளித்து தயாராகவிடுவான் அவன்... தாத்தாவிற்க்கு முன் சனி மூலையில் சட்டான் பிள்ளையாய்.

மணல்வெளி என்பது ஒரு வயலின் பெயர், காவிப் படுகையில் இருமண் பாடு கொண்ட நிலம், பொன் போட்டால் பொன் விளையும் என்று அவன் தாத்தா சொல்லுவார். அதில்தான் வருடா வருடம் பொன்னேறு கட்டுவார். ஆடிப் பதினெட்டில் எப்படியும் காவிரி ஆற்றில் தண்ணி வந்துவிடும், அதற்க்கு இரு வாரம் முன்பாக பொன்னேறு கட்டி, மறு நாளே “மோட்டார் பம்ப்” குழாய் வழி நீர் பாய்ச்சி மணல்வெளி நிலத்தில் விதை தெளித்து... இரண்டு வாரத்தில் மற்ற நிலங்களுக்கு நாற்று தயாராகிவிடும். பொன்னேறு கட்டிய அன்று சட்டான் பிள்ளையாய் இருந்த அவன் நாற்றுடன் தானும் வளந்து, நாற்று பரிக்கும் போது தாத்தா சொல் கேட்கும் சமத்து பிள்ளையாய் அவன்.

வருடங்கள் உருண்டோடின...

அவன் பஞ்சாங்கம் பார்பதை தவிர்த்தான், காரணம் தாத்தா அவனை தவிக்கவிட்டு போனார் என்பதால் அல்ல, ஆடியில் காவேரியில் தண்ணீர் வருவது தவிர்த்து போனதால். பொன்னேரு மறந்து போனான், காரணம் அம்மா பூட்டரிசி செய்யாததால் அல்ல, வானம் பொய்த்து போனதால்.

இன்று அந்த
பொன்னேரு பூட்டிய விவசாயின் கண்ணில் கண்ணீரு,
பூட்டரிசி படைத்த வயல்வெளிக்கு இன்று வாய்க்கரிசி.

விவசாய நிலங்களில் பார் வீடு
வாய்க்கால் வரப்புகளில் தார் ரோடு
வித்திடுறான் இயற்கைக்கு சீர் கேடு
விழித்துக்கொள்... இல்லையேல்…
வாய்சோற்ற்க்கு ஏந்தனும் திரு வோடு

(காலிப் பெருங்காய டப்பா... ஆனால் அதன் மணம்... இன்றும் நறுமணமாய்)