இளவேனில் கால மஞ்சள் நீராட்டு

இளவேனில்...

ஊரெல்லாம் மஞ்சள்
மகரந்தத்தின் கொஞ்சல்
இது
இளவேனில்கால கெஞ்சல்
வரும் கோடைக்கான அஞ்சல்

மஞ்சள் நீராட்டு...

கை படாமல் கார் வாஷ் செய்து
கராஜில் நிற்காமல் காற்றாட நின்றவளை

அங்கமெல்லாம் மஞ்சள் பூசி சென்றவன் எவன்?
அவள் மாமனோ? அவன் பெயர் போலனோ?

ஓவ்வாமை...

காதலி
காதோடு ஆடுது கம்மல்
காரணி
உன்னால் வந்த தும்மல்.

இவர்கள் சந்தித்தால்....

மரப் புலியும்... அதாங்க டைகர் உட்ஸ்-ம், நம்ம காவிப் பு(போ)லியும் சந்தித்தால் என்ன பேசிப்பாங்க?
மரப் புலி: நான் ஒரு விளையாட்டுப் பிள்ளை, என்னை வீணா வாம்புல மாட்டி விட்டுட்டாங்கையா... என் பெண்டாட்டி ஒரு பக்கம், பத்திரிக்கை காரர்கள் ஒரு பக்கம்ன்னு பின்னி எடுத்துட்டாங்கப்பா.

நித்தி: எங்க ஊருல பெண்கள் புலிய முரத்தால் அடித்ததாக வீர வரலாற்று செய்திகள் இருக்கு, ஆனா முகத்துல அடிச்சதா இல்லை. நீ வேஸ்ட்டப்பா. மூஞ்சில அடிவாங்கின சரி, காரை ஏன் கொண்டி மரத்துலயும் ஃபயர் ஹைட்ரண்ட் மேலயும் மோதின?

புலி: உண்மைதான் சாமி, எனக்கு உங்களவுக்கு திறமை இல்லை. உங்க கூட ஆசிரமத்துக்கு வந்து கொஞ்சம் பயிற்ச்சி எடுத்துக்கனும். நீங்க ஜாலிய படுத்து இருக்கீங்க, எல்லாத்தையும் அந்த புள்ளையே பண்ணுது.
நித்தி: (மனசுக்குள்... அட பாவிங்களா, இவன் நம்மூரு டி.வி.யும் பேப்பரும் படிக்க மாட்டான்னு நினைச்சி கொஞ்சம் பில்டப் பண்ணுலாம்ன்னு பார்த்தா இமேஜ டேமேஜ் பண்ணிட்டீங்களா?) புலி அதெல்லாம் கிராபிஃக்ஸ், நம்பாதீங்க.

புலி: சாமி, விடுங்க சாமி காய்ச்ச மரம்தான் கல்லடிபடும்ன்னு சொல்லுவாங்க. இருந்தாலும் இந்த விவகாரத்துல உங்களுக்கு திறமை பத்தாது சாமி, நான் இதுமாதிரி காரியத்துக்கெல்லாம் தனி சொகுசு படகு வெச்சிருக்கேன்... தயங்காம கேளுங்க கொடுத்து உதவுரேன்.

சிறிது நாட்களுக்கு பிறகு...
சாமி: புலி, என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிட்டீங்க?

புலி: சாமி, தெரியாம ஒன்பது பொண்ணுங்கன்னு ஒலறிட்டேன், ஒழுங்கா மத்ததையும் மறைக்காம சொல்லுன்னு உட்காரவெச்சி கேள்வி மேல கேள்வி கேக்கிறாங்க சாமி

சாமி: என்ன பாருங்க... அதெல்லாம் அலிஹேஸன், கான்ஸ்பைரஸி, கன்ஃபியூஸன், மிஸ்ரெப்ரஸண்டேச்ஸன், மேனிப்புலேஸன், பெனிப்ஃட் ஆஃப் டவுட்டுன்னு சொல்லிட்டு... எனக்கு கும்ப மேலா வேல இருக்குன்னு எஸ்கேப் ஆயி ஹிமாச்சல் போயி செட்டில் ஆகிட போறேன்.

புலி: என்னமோ சாமி நீங்க ஸன்... ஸன்-ன்னு சொல்றீங்க, எந்த சன்ன சொல்றீங்கன்னு எனக்கு ஒன்னும் புரியல.

சாமி: உனக்கு ஒன்னும் புரியாது. இனிமேலாவது திருந்து, கேள்ஸ்ஸ விடு, கோல்ஃப் விளையாட்ட மட்டும் பாரு.

பழமையின் குதபகாலம் – பின்னூட்ட பதிவு

சாமியார்களும் சந்திப்புகளும்

சாமியார்கள் அன்றும் இருந்தனர், இன்றும் இருக்கின்றனர், சந்திப்புகள் அன்றும் நடந்தது, இன்றும் நடக்கின்றது. ஆனால் இன்று அந்த சந்திப்புகள் சந்தி சிரிக்கின்றன... காரணம் சாமிகள் இல்லை இன்றைய ஆசாமிகள்.

அன்று அருள் வேண்டி சென்றனர், இன்று பொருள் வேண்டி செல்கின்றனர். சாமியோ, சாமியாரோ... அவர்கள் என்ன கருவூலத்தின் காரியதரிசிகளா... நீங்கள் வேண்டியவுடன் காசு (பொருள்) கொடுக்க?

அன்று அமைதி வேண்டி நடந்த சந்திப்புகள்... சாமிகளை பார்க்க சென்றேன் ஒரு விடிவுகாலம் பிறந்தது என்று சொல்லுவார்கள். அது சாமியார் செய்த மாயமோ மந்திரமோ இல்லை, அங்கு நடந்த சந்திப்பினால் பெற்றது. உதாரணத்திற்க்கு எல்லா காரணிகளும் சரிவர இருந்தும் ஒரு சரியான மேளாலர் இல்லாததால் மனம் நொந்த ஒரு நிறுவனத்தின் முதளாலி, தன் நேர்மையான செயல்பாட்டால் வேலையிழந்த ஒரு தொழிலாளி, சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருக்கும் வேளையில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்கின்றனர், இருவரின் தேவைகளும், மன எண்ணமும்/ஓட்டமும் ஒரே அலைவரிசையில் இருக்க இவர் அவருக்கு, அவர் இவருக்கு என்று உதவ இருவரது வாழ்விலும் ஒரு முன்னேற்றம் ஏற்பட அது சாமிகளின் சந்திப்பால் உண்டானது என்று தோன்றி, மீண்டும் அங்கு செல்ல அடுத்த சந்திப்பில் அங்கு வேறு சிலரை சந்திகின்றனர், அவர்களுடைய தேவை ஒரு மருத்துவ உதவியாக இருக்க, அதற்க்கு இவர்கள் உதவ, இவர்கள் செயத அந்த “அறம்” தொண்டு மரமாக (விரிட்சம்) வளர்ந்தது. சாமியார் கற்றதும் பெற்றது ஏதும் இல்லை, மாறாக சாமியாரை காணவந்தவர் கற்றது பெற்றதும் அவரவர் கண்ணும் காதும் திறந்திருந்தற்க்கு ஏற்ப்ப. சாமியாரின் தரிசனத்திற்க்கு காத்திருந்த காலமும், அங்கு வந்திருந்தவர்களின் பிரச்சனைகளை பார்த்த/கேட்ட பிறகு தன் பிரச்சனை ஒரு விசயமே இல்லை எனவும், அதை தானே எவ்வாறு சரிசெய்து கொள்ளலாம் என நினைக்கத்தோன்றும் “சுய தேடல்” அடையும் மனத் தெளிவுமே நீங்கள் அங்கு பெற்ற ”அரு-மருந்து”.

இன்று, காத்திருப்பது காணாமல் போய் எல்லாவற்றிர்க்கும் ஒரு பரபரப்புடன் இருப்பதால் சாமியாரை பார்க்க ஒரு ”கால கட்டம்” அதற்கு கப்பம் ”கட்டாய கட்டணம்”, சாமியார் மருந்தாய் அருளுவது ஒரு ”காய கல்பம்”... என அல்பம் சொல்பம்-ஆகி விட்டது.

சாமியை தேடுவதற்க்குமுன் உங்கள் மனச் சாவியை தேடுங்கள், திறந்த மனதோடு உங்கள் குடும்பத்தினருடன் பேசுங்கள், நண்பர்களுடன் பேசுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கான காரணங்கள் தோரணங்களாக மாறும்.

பொன்னேரு...

ஏய் சின்னவனே, சாமி அலமாரியிலிருந்து பஞ்சாங்கத்த எடுத்துகிட்டு வாடா.

எந்த பஞ்சாங்கம் தாத்தா?

அந்த பாம்பு படம் போட்டிருக்குமே, கௌரி பஞ்சாங்கம்டா.

தாத்தா ஏதும் விசேஷம் வருதா நம்ம வீட்டுல?

ஆடி பொறந்துடுச்சில்ல, விதைவிட வேண்டாமா? பொன்னேரு கட்டுறதுக்கு நல்ல நாள் பாக்கனும்ல்ல அதுக்குடா.

தாத்தா... இன்னிக்கேவா பொன்னேரு கட்ட போரோம்?

இல்லடா... இன்னும் ரெண்டு நாள் கழிச்சி... புதன் கிழமை காலைல கட்டுவோம், நீ இப்ப பஞ்சாங்கத்த கொண்டுவந்து கொடுத்துட்டு... கொள்ளைல செல்லதுரை இருப்பான்... அவனை போயி மணவெளி பங்குல... சனி மூலைல காட்ட கழிக்க சொல்லு, வயல் பக்கம் கொத்தி போட்டுட்டு... அப்படியே வரப்ப செத்தி வெக்க சொல்லு... சாமிக்கு படையல் வைக்கினும்ல்ல அதுக்கு.

சரி தாத்தா.

[பொன்னேரு (பொன் + ஏர்)... வருடத்தில் ஒரு நாள் பொன்னேரு பூட்டும் நாள்... ஒரு சிறப்பு தினமாக இருக்கும்]

அன்று அவன் அம்மா அரிசியில் வெள்ளம், தேங்காய், எள்ளு எல்லாம் போட்டு அந்த பூட்டரிசி-யை தயார் செய்வாள், அது கூட அவல், வெள்ளம், பொட்டுக்கடலை கலவையும் இருக்கும். பிரப்பங் கூடையில் பூ, பழம், பூட்டரிசி போன்ற பூசை சாமான்களுடன் புதுப் பெண் போல் விதை நெல்லும் அதில் இருக்கும். தீபாவளிபோல் அதிகாலையில் குளித்து தயாராகவிடுவான் அவன்... தாத்தாவிற்க்கு முன் சனி மூலையில் சட்டான் பிள்ளையாய்.

மணல்வெளி என்பது ஒரு வயலின் பெயர், காவிப் படுகையில் இருமண் பாடு கொண்ட நிலம், பொன் போட்டால் பொன் விளையும் என்று அவன் தாத்தா சொல்லுவார். அதில்தான் வருடா வருடம் பொன்னேறு கட்டுவார். ஆடிப் பதினெட்டில் எப்படியும் காவிரி ஆற்றில் தண்ணி வந்துவிடும், அதற்க்கு இரு வாரம் முன்பாக பொன்னேறு கட்டி, மறு நாளே “மோட்டார் பம்ப்” குழாய் வழி நீர் பாய்ச்சி மணல்வெளி நிலத்தில் விதை தெளித்து... இரண்டு வாரத்தில் மற்ற நிலங்களுக்கு நாற்று தயாராகிவிடும். பொன்னேறு கட்டிய அன்று சட்டான் பிள்ளையாய் இருந்த அவன் நாற்றுடன் தானும் வளந்து, நாற்று பரிக்கும் போது தாத்தா சொல் கேட்கும் சமத்து பிள்ளையாய் அவன்.

வருடங்கள் உருண்டோடின...

அவன் பஞ்சாங்கம் பார்பதை தவிர்த்தான், காரணம் தாத்தா அவனை தவிக்கவிட்டு போனார் என்பதால் அல்ல, ஆடியில் காவேரியில் தண்ணீர் வருவது தவிர்த்து போனதால். பொன்னேரு மறந்து போனான், காரணம் அம்மா பூட்டரிசி செய்யாததால் அல்ல, வானம் பொய்த்து போனதால்.

இன்று அந்த
பொன்னேரு பூட்டிய விவசாயின் கண்ணில் கண்ணீரு,
பூட்டரிசி படைத்த வயல்வெளிக்கு இன்று வாய்க்கரிசி.

விவசாய நிலங்களில் பார் வீடு
வாய்க்கால் வரப்புகளில் தார் ரோடு
வித்திடுறான் இயற்கைக்கு சீர் கேடு
விழித்துக்கொள்... இல்லையேல்…
வாய்சோற்ற்க்கு ஏந்தனும் திரு வோடு

(காலிப் பெருங்காய டப்பா... ஆனால் அதன் மணம்... இன்றும் நறுமணமாய்)

துரியோதனன் – சொ.கா.சூ

ஒருவர் நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்றால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்... இல்லையென்றால் சொந்த காசில் சூனியம் (சொ.கா.சூ) வைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

மஹாபாரதத்தில் அதை மிக அழகாக சொல்லியிருப்பதை பார்க்கலாம். கிருஷ்ணன் துரியோதனனை சந்தித்து பேசுகிறார், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைகிறது. சரி இனி இவனிடம் பேசி பயனில்லை என்று கிருஷ்ணன் அவன் மாளிகையிலிருந்து புறப்படுகிறார். அப்படி புறப்பட்டு வரும் போது மாளிகை வாயில் பாதையில் அஸ்வதாமன் வருவதை பார்க்கிறார், துரியோதனன் கோபத்தில் மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பதையும் பார்க்கிறார். சரி இதுதான் சமயம் இவன வெச்சு அவன் மண்டைய குழப்பிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி காய் நகர்த்துகிறார்.

எதிரணியில் கிருஷ்ணன் இருந்தாலும், அஸ்வதாமன் மரியாதை நிமித்தம் கை குவித்து கிருஷ்ணனுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அதுதான் சமயம் என்று கிருஷ்ணன் தன் மோதிரத்தை கழட்டி கீழே விட, கிருஷ்ணன் மரியாதைக்குரியவர் என்பதால் அஸ்வதாமன் அதை குனிந்து எடுத்து கிருஷ்ணன் கையில் கொடுக்கிறான். கிருஷ்ணன் அதை நன்றியுடன் (சிறிது கயை பிடித்து அழுத்தி) வாங்கி கொள்கிறார். ஒன்றும் பேசிக் கொள்ளவே இல்லை, பிறகு இருவரும் வணங்கி விடை பெருகின்றனர்.

மாளிகையின் மாடியிலிருந்து இந்த காட்சியை ஊமைப் படமாய் துரியோதனன் பார்க்கிறான். கிருஷ்ணன் அஸ்வதாமனிடம் பேசி அவனை அவர்கள் (பாண்டவர்கள்) பக்கம் மாற்றிவிட்டான் என எண்ணுகிறான்.

இனி... துரியோதனனும் அஸ்வதாமனும் பேசிக்கொண்டது…

துரி: ஏண்டா பண்ணாட... அவ்ந்தான் நம்ம எதிரியாலுன்னு தெரியும்ல... அவன் கைல உனக்கின்னாடா பேச்சி வேண்டிகிடக்கு?

அஸ்: தோ...டா. என்னமோ புச்சா சொல்லவந்திட்டாரு. நாங்களும் உப்பு போட்டுதான் சோறு துண்றோம்... எங்களுக்கும் சொரண இருக்கு... நான் எவ்ன் கைலியும் பேஸ்ல... சும்மா மரியாதைக்காண்டி ஒரு அலோ சொல்லிகினோம்...
துரி: சரி நீ பேஸ்ல... உன்ன நம்பறேன்... ஒரு பேச்சுக்கு நீ பேஸ்லன்னே வெச்சுகிறன். நான் இங்கன இருந்ததால நீ பேஸ்னயா இல்லியான்னு என்னால கட்டன்ரைட்டா சொல்லமுடியல. ஆனா அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணியே... இன்னா மேட்டரது... அத்த சொல்லு.

அஸ்: இன்னாது... நான் அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணினா? யாம்பா... உன்கு ஏதாவது மண்ட கிண்ட ஓடிப்போச்சா? இல்ல... ராத்திரி அட்ச்ச மப்பு இன்னும் தெளியலயா?

துரி: நீ என் கைல டபாய்ககாத... என் ரெண்டு கண்ணால பார்த்தேன். தரையிலேருந்து மண்ண எடுத்து அவன் கைல அடிச்சி சத்தியம் பண்ணுன.

அஸ்: யோவ்... இன்னாயா உன்கூட படா பேஜாராகீது... பேசாதத பேஸ்னேங்கிற... செய்யாதத செஞ்சேங்கிற... இத்தான் பெரியவங்கோ சொல்றத கேட்கனுங்கிறது. நீ யான் தோஸ்த்து, நீதான் எனக்கு முக்கியம்னு... நீ தப்பானவன்னு தெரிஞ்சும் உன்கு உதவ வந்தம் பாரு... எம்புத்திய ஜோட்டால அடிக்கனும்... அக்காங்.

(எது எப்படியோ, கிருஷ்ணன் அவர் நினைச்ச வேளைய கச்சிதமா செய்து முடித்திட்டார்).

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், உடையவரிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொள்வதே மெய்.

எனக்கு பிடித்த பத்து பெண்கள்...

என்னை நண்பர் கோபி பிருந்தாவனத்திலிருந்து இந்த தொடர் பதிவிற்க்கு அழைத்திருந்தார். நன்றி கோபி... இனி கூப்பிட்டா நிபந்தனை இல்லாம கூப்பிடுங்க. இல்லையா நிபந்தனைய கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாம் என சொல்லுங்களேன். (சரி... சரி... ஏன் இவர கூப்பிட்டோம்ன்னு வருத்தப் படாதீங்க). கற்ப்புக்கரசி ஒருவரை சொல் என்றால் கண்ணகிக்குமுன் நமக்கு நினைவிற்க்கு வரவேண்டியவர்கள் நம் அன்னையும் பிறகு (திருமணமாகியிருந்தால்) நம் மனைவியுமாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து. நிபந்தனை இல்லையெனில் கொஞ்சம் சோப்பு போட்டிருக்கலாம்...

1. குண்டு டீச்சர் : செம்பனார்கோவில் உதவி பெரும் நடு நிலைப்பள்ளியில் என் முதல் வகுப்பு ஆசிரியை, பெயர் ஜெயலெட்சுமி. நான் காலந்தவறாமையை கற்றுகொண்டது இவரிடம்தான் என்பேன். உட்கார்ந்த இடத்திலிருந்தே நெய்வேலி காட்டாமணி-யால் வகுப்பு எடுத்தவர். இவர் எனக்கு பிடித்தவர் மட்டும் அல்ல என் மனதில் பசுமரத்து ஆணியாய் பதிந்தவர்... எனக்கு முதலில் பிடித்தவர்.

2. அவ்வையார் : திருவள்ளுவரின் இரு வரியில் நான் உலகை அறியும் முன் ஒரு வரியில் பல உண்ணதங்களை “ஆத்திச் சூடி”-யின் மூலம் அறிய செய்தவர். அறம் செய விரும்பு, ஆறுவது சினம்... அவரை மறக்குமா என் மனம்?

3. புஷ்ப்பவள்ளி டீச்சர் : மயிலாடுதுறை தி.ப.தி.அர. மேனிலைப் பள்ளியில் எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர். அவர்களை பிடிக்க இரண்டு காரணங்கள், 1. எப்போதும் புன்னகை, 2. மாணவர்களின் மனமறிந்து பாடம் சொல்லிக்கொடுத்த தன்மை. வெட்கப்படாமல் தந்தி ஆங்கிலம் பேசு என்று தட்டிக்கொடுத்தவர்... ஏறிங் த மாடி, அடிச்சிங் த பம்ப் என்று சொல்லு என சொல்லி... சிரிக்காமல் புன்னகைத்தவர். (டீச்சருக்கு தெரியாது, தந்திக்கு பிறகு இண்டர்னெட்டு, ஈமெயிலு-ன்னு வந்திருச்சு... ஆனா தம்பி இன்னும் தந்திதான் அடிச்சிகிட்டு இருக்காருன்னு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

4. மேரி-கியூரி : மரியா எனும் இயர்பெருடன் பிறந்து, மணமானபின் கணவர் பியரி-கியூரின் பெயரால் மேரி-கியூரி ஆகி அணு ஆராய்ச்சியில் நோபல் பரிசு பெற்றவர். கணவன் இறந்த பின் கைம்பெண்ணாக இருக்காமல் கியூரி அணுகதிர்வீச்சு சோதனை மையத்திற்க்கு தலைமை ஏற்றதோடு ரேடிய-கதிர்வீச்சை மனித சிகிச்சைக்கு தக்கவாறு பிரித்தெடுத்த பெருமைக்குரிய நோபல் மங்கை.

5. அன்னை தெரசா : அண்டைய தேசத்திலிருந்து கல்வி கற்றுக்கொடுக்க வந்தவர்தான், க(கொ)ல்கத்தா சாலைகளில் அவர் கண்ட காட்சி… அவரை கல்விப் பணியிலிருந்து களப்பணிக்கு அற்பணிக்க வைத்தது. நோபல் பரிசுக்கு இவரால் பெருமை... அவரைப் பிடிக்கா விட்டால் என் மனதில் ஏதோ சிறுமை.

6. ஸ்டெஃபி கிராஃப் : ஸ்டெஃபி... அழகில் குல்ஃபி, டென்னிஸ் உலகில் ஆட்டத்தில் பேட்டா ராஃப்... இருப்பினும் நான் இதுவரை வாங்கவில்லை அவரிடம் ஆட்டோகிராஃப்.

7. ஷான் ஜான்சன் : பார்க்கத்தான் ஆள் குட்டி, பல்டி அடிப்பதில் படு சுட்டி. ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் எனக்குப் பிடித்த குட்டி(ப் பிசாசு).

8. நடிகை காஞ்சனா : காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்தவர். விமானப் பணிப் பெண்ணாக பணியாற்றி பின் நடிகையாகி தமிழ் சினிமாவை அழகு படுத்தியவர். (தற்போது அவர் பொருளாதாரத்தில் நலிவடைந்து மிக மோசமான நிலையில் இருப்பதாக எங்கோ படித்தேன்... வருத்தமாக இருந்த்து)

9. பாடகி அனுராதா ஸ்ரீராம் : அழகிய குரல்களால் என்னை கவர்ந்தவர். எவ்வளவோ பாடல்கள்... மல்லிகையே... மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் கூறு... என்று என்னைத் தேடி இருந்தாலும்... கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

10. கவிஞர் தாமரை : ஒரு கவிஞராய்தான் எனக்கு தெரிந்தவர், பிறகு பாடலாசிரியையாய்... வியாபார உலகில், வளர்ந்து வரும் கலைஞர் எவர் ஒருவரும் செய்ய துணியாத ஒன்றை, என் எண்ணமும் எழுத்தும் ஒன்றே என தன்னை ஈழத் தமிழர்களுக்கான போரட்டத்தின் போது வெளிப்படுத்தியது... தெரிந்தவரை பிடித்தவர் ஆக்கியது.